Saturday 18 October 2014

TN NFPE COC FIRST NOTICE ON DIAMOND JUBILEE CELEBRATIONS(09.11.14) RELEASED





THANKS TO CHIEF PMG, TN CIRCLE FOR GIVING LIFE TO MORE THAN 10 POSTMAN EXAM PASSED CANDIDATES

CHIEF  PMG, TN  அவர்களுக்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்று மற்றும் 
தமிழ் மாநில NFPE  GDS  சங்கத்தின் 
நெஞ்சார்ந்த நன்றி !

          அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். கடந்த 24.09.2014 அன்று தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பிலும் தமிழ் மாநில NFPE  GDS  சங்கத்தின் சார்பிலும் , நம்முடைய அஞ்சல் மூன்றின்  பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுடன்  நாம் சென்று சில பிரச்சனைகளை அளித்து விவாதித்த விபரம் ஏற்கனவே நம் அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் கடந்த அக்டோபர் 1 ந் தேதி அன்று வெளியிட்டிருந்தோம். அதில் நாம் அளித்திருந்த ஏழு கடிதங்களில் , இரண்டு பிரச்சினைகளுக்கு  நமது CHIEF  PMG அவர்கள் தற்போது தீர்வளித்துள்ளார்.

தபால் காரர்  தேர்வில் வெற்றிபெற்றிருந்தும்  நீதி மன்ற வழக்கின் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக  நிலுவையில் இருந்த  10 க்கும் மேற்பட்ட GDS  ஊழியர்களுக்கு பணி  நியமன உத்தரவு.

          2012 க்கான தபால்காரர் தேர்வு 2013 ஏப்ரல் திங்களில் நடைபெற்றது.  தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு  ஆங்காங்கே  பல GDS ஊழியர்கள் பணி  நியமனம் பெற்றனர். ஆனால் ANSWER  KEY தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டு நம்முடைய மாநிலச் சங்கத்தால் REVALUATION செய்திட பிரச்சினை கடந்த 23.09.14 இல்  எழுப்பப் பட்டது.(பார்க்க மாநிலச் சங்க வலைத்தளச் செய்தி - செப். 2013 ) 

                இதன் காரணமாக  மாநிலமெங்கும் கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு  விடைத்தாள் மறு மதிப்பீடு செய்து REVISED  RESULT அளிக்கப்பட்டது. ஏற்கனவே பணி  நியமனம் பெற்ற தோழர்கள்  தங்களின் பணி  நியமனத்தை ரத்து செய்திடக் கூடாது என்று கோரி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையும் பெற்றனர் . இதனால் உரிய காலிப் பணியிடம் இல்லை என்றும் தடை ஆணை உள்ளதென்றும்  முறையாகத் தேர்வு பெற்ற இந்த GDS  ஊழியர்களுக்கு  தபால்காரர் பதவி அளிப்பது நிறுத்தப் பட்டிருந்தது. 

                 இந்தப் பிரச்சினை, பாதிக்கப்பட்ட தோழர். முத்துராமன் என்பவரை ஆதாராமாகக் கொண்டு ,  பலகாலமாக நம்மால் எழுப்பப் பட்டாலும் , நீதி மன்ற வழக்குகள் முடிவடையாத காரணத்தால் சிக்கல் தீரவில்லை. எனவே 2014 க்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு தற்போது அதற்கும் தேர்வு நடைபெற உள்ள சூழலில் , 2013 இல் முறையாக தேர்வு பெற்றவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப் படாததை சுட்டிக் காட்டி நாம் CHIEF  PMG அவர்களிடம் பேசினோம். பிரச்சினையின் நியாயத்தை உணர்ந்த  CHIEF  PMG அவர்கள், உரிய சட்ட ஆலோசனை செய்த பிறகு முடிவெடுப்பதாக அறிவித்தார். 

          இந்தப் பிரச்சினை குறித்து நாம் பல்வேறு ஆவணங்களை நமது APMG, RECTT  திரு. N . ரவி அவர்களிடமும் அளித்துப் பேசினோம். இவற்றை  CHIEF  PMG அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் உறுதி அளித்தார் . அதன் பேரில்  பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு  தற்போது பாதிக்கப்பட்டஅனைத்து ஊழியர்களுக்கும் உடனடி பணி  நியமனம் வழங்கிட நமது CHIEF  PMG அவர்களால் உத்திரவிடப்பட்டுள்ளது. உத்திரவின் நகலை கீழே பார்க்கவும். இந்தப் பிரச்சினையின்  தன்மையை புரிந்து கொண்டு பரிவுடன் முடிவினை எடுத்த நமது CHIEF  PMG  உயர்திரு. T. மூர்த்தி அவர்களுக்கும் , பிரச்சினை தீர்ந்திட உறுதுணையாக இருந்த  APMG, RECTT  திரு. N .ரவி   அவர்களுக்கும்   நமது அஞ்சல் மூன்று மற்றும் NFPE  GDS  சங்கங்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


NFPE DIAMOND JUBILEE CONVENTION AT MAYILADUTURAI DIVISION A GRAND SUCCESS !

அன்புத் தோழர்களுக்கு / தோழியர்களுக்கு  வணக்கம். 

கடந்த 12.10.2014 ஞாயிறு அன்று மயிலாடுதுறை  அஞ்சல் மூன்று கோட்டச்சங்கம் சார்பில் NFPE  வைரவிழா - கருத்தரங்கு  நிகழ்ச்சி ,  மயிலாடுதுறை பட்ட மங்கலத் தெரு  கோவிந்தம்மாள்  திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.  பிற்பகல் சுமார் 02.30 மணியளவில்  கொடியேற்று நிகழ்வுடன் நிகழ்ச்சி துவங்கியது . நமது சம்மேளனக் கொடியை  நம்முடைய அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர்.  K.V.S.  அவர்கள் ஏற்றி வைக்க,  மாநிலச் செயலர் தோழர்.  J .R . அவர்கள் விண்ணதிரும்  கோஷங்களை எழுப்பிட,  விழா இனிதே துவங்கியது. நமது அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர்  தோழர். K . துரை  அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து  கோட்டத் தலைவர் தோழர். P . ரவிச்சந்திரன் அவர்கள்  தலைமையுரை நல்கிட அதனைத் தொடர்ந்து  கருத்தரங்க நிகழ்வு  துவங்கியது.

நம் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள் , நம்முடைய அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றினை  உணர்வு பொங்க மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.  தொடர்ந்து  நம்முடைய  அஞ்சல் மூன்றின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர். N .S . அவர்கள் இலாக்காவின் இன்றைய நிலைமை குறித்தும் , மாறிவரும் சூழலில்  நம்முடைய தொழிற்சங்கக் கடமை குறித்தும் நாம் இதுவரை அறியாத பல  செய்திகளை  மிகச் சிறப்பாக பகிர்ந்து கொண்டார்.  பின்னர் பேசிய  நம்முடைய  முன்னாள் பொதுச் செயலர் தோழர். K.V.S.  அவர்கள் , ஏழாவது ஊதியக் குழு முன்னர் நம்முடைய சங்கம்  மற்றும் சம்மேளனம் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் சாராம்சம் குறித்து விரிவானதொரு சிறப்பான உரையினை  வழங்கினார். 

இதனை அடுத்து , மயிலாடுதுறையில்  பணியாற்றி ஒய்வு பெற்ற   இயக்கத் தின் மூத்த  தலைவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இறுதியில் , NFPE  GDS  சங்க மாநிலச் செயலர் தோழர். R . தன்ராஜ்,  அஞ்சல் மூன்று மண்டலச் செயலர் தோழர். R . குமார் , அஞ்சல் மூன்று மாநில உதவி நிதிச்செயலர் தோழர். R . பெருமாள் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார். 

இந்த நிகழ்வு கிட்டத்தட்ட  ஒரு மத்திய மண்டல மாநாடு போல அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.  மண்டலம் முழுதும் இருந்து சுமார் 300 தோழர்கள் கொட்டும் மழையிலும்  கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இரவு 08.00 மணியளவில்  கோட்டச் சங்கத்தின் நிதிச் செயலர் தோழர். K . வெங்கடேஷ் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது. 

நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட  சில புகைப்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே தருகிறோம்.






POST OFFICE IMPROVING BUSINESS WITHIN THEIR OWN EMPLOYEES !

'சொந்தக் காசில் சூனியம்' வைக்கலாமா ?

அஞ்சல் துறையின்  வியாபார யுக்தி  அபாரம் !
வணிகப் பெருக்கம் அமோகம் !
இனி எந்த ஒரு ஊழியரும் ஊதியமே வாங்க வேண்டாம் !
மாதம் 100 RD கணக்குகள்  அவரவர் பெயரிலேயே  துவக்குங்கள் ! 
ஆனால் மாதா மாதம் பணம் கட்ட வேண்டாம் ! 
PASS  BOOK போட வேண்டாம் !
( சும்மா கணக்கு எண்ணிக்கைக்குத் தானே !)

கிராமப் புற அஞ்சல் ஊழியர்கள்  வணிகப் பெருக்கம் என்ற 
பெயரில் கணக்குக் காட்ட  'பினாமி' யாக  RPLI  POLICY  உங்கள் பணத்திலேயே போடுங்கள் ! 

மாதா மாதம் PREMIUM  கட்ட வேண்டாம் ! 
ஆனால் மாதா மாதம் புதிது புதாதாக 'பினாமி ' பாலிசி போடுங்கள் ! 
பாலிசி எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டாமா ! 
கீழ் மட்ட அதிகாரிகள் உயர் மட்ட அதிகாரிகளிடம்  AWARD  வாங்க வேண்டாமா ! 

70%  பாலிசி க்கள்  இறந்து போனாலென்ன ?  
ஒவ்வொரு பாலிசி க்கும்  இலாகாவுக்கு  ரூ. 420/- செலவு ஆகிறதாம் ! 
ஆனால் நீங்கள் ரூ.15.00 க்கு WHOLE  LIFE  POLICY  ஆக மாதம்
100 பாலிசி போடுங்கள் ! வியாபார அபிவிருத்தி தானே ! 

ஒட்டு மொத்தத்தில் ரூ.15.00 வரவு ரூ. 420.00 செலவு . 
இது இலாக்கா ஆண்டு இறுதியில் கணக்கு எடுக்குமபோதுதானே 
தெரிய வரும் ! 

அது பற்றி நமக்கென்ன கவலை !
இருக்கவே இருக்கு இலாக்கா நட்டத்தில் இயங்குகிறது ! 
எல்லாரும்  BELT  ஐ இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள் என்ற கோஷம் !

உங்களுக்கு நீங்களே  'MY   STAMP' போட்டுக் கொள்ளுங்கள் ! வீட்டில் பெண்டாட்டி பிள்ளை குட்டிகளிடம் காட்டி பெருமை அடையுங்கள் !
வியாபாரம்  அபிவிருத்தி  அடைய வேண்டாமா ? 

நீங்களே PHILATELY  DEPOSIT  ACCOUNT உங்கள் பெயரிலேயே ஆரம்பித்துக் கொள்ளுங்கள் ! நீங்களே  வாங்கிய 
STAMP  ஐ கவுன்டரில் விற்றுக் கொள்ளுங்கள் ! 
வியாபார அபிவிருத்திதானே ? அமோகமாக  இலாக்காவுக்கு லாபமில்லையா ?

IMO பெருக வேண்டுமா ? உங்களுக்கு நீங்களே  MONEY  ORDER  BOOK   செய்யுங்கள் ! உடனடி பட்டுவாடா  என்று RECORD  செய்யுங்கள் ! பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுங்கள் ! 
எல்லாம் வியாபார அபிவிருத்தி அல்லவா ?

EPOST  'புடியுங்கள்' ! அல்லது உங்களுக்கு நீங்களே செலவு 
செய்து EPOST  அனுப்பி  அகமகிழ்ந்து கொள்ளுங்கள் !  

உங்கள் ஊதியப் பணத்தை குடும்பத்திற்கு ஏன் விரயம் செய்கிறீர்கள் ? இலாக்காவுக்கு லாபம் ஈட்ட இப்படியான உக்திகளை கையாளுங்கள் ! நிச்சயம்  லாபம் தான்  ! முடிந்தால் தனியார்  AGENCY  முறை மூலம் பெறும் பொருட்களை நீங்களே  வாங்கிக் கொள்ளுங்கள் !   

இப்படி தீவிரமாக BUSINESS  செய்துகொண்டிருக்கும் போது , 
பசி எடுத்தால்  நீங்கள் வெளியே சென்று  சாப்பிடாதீர்கள் ! 
உங்களுக்குள் நீங்களே   ஒருவரை ஒருவர் கடித்து  பசியாறுங்கள் !  அல்லது பசி எடுத்தால்  தன் சதையையே தானே 
கடித்து பசியாறுங்கள் !  பசி தீர்ந்து விடும் !
இலாகாவின் வணிகப் பசி இப்படித்தானே தன்  ஊழியரையே 
தான் கடித்து தன் பசி ஆறுகிறது ?

இவையெல்லாம்  வணிக வளர்ச்சி கூட்டங்களில் மேலதிகாரிகள் கீழதிகாரிகளுக்கு  அளித்திடும் INNOVATIVE  BUSINESS  
DEVELOPMENT  உக்திகளாகும்.  

இல்லையென்றால் , நாங்கள் மேல சொன்னவற்றையெல்லாம் கீழ் அதிகாரிகள் சுற்றறிக்கையாக , கிளை / துணை அஞ்சலகங்களுக்கு அனுப்புவார்களா ? அப்படி அனுப்பினார்கள் என்றால் , நிச்சயம் இவை மேலதிகாரிகள் அளித்த  ஆலோசனைகள் தானே ?   
வாழ்க அஞ்சல் துறை ! வளர்க வணிகப் பெருக்கம் ! 

இனி RECRUITMENT  NOTIFICATION  போடும்போது:

 'சொந்தக் காசில்  வணிகம் செய்து வியாபார அபிவிருத்தி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் ' 
என்று  NOTIFICATION செய்தால்  நன்றாக இருக்கும் !. 
அல்லது 'சொந்தக் காசில் சூனியம்' வைத்துக் கொள்ள 
விருப்பமிருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்  என்று அறிவிக்கை செய்திடவும் !  இலாக்கா இப்படியே போனால்  நன்றாக வளரும் ! 
அதில் ஊதியம் பெறும்  நாமும்  வளர்ச்சியடைவோம் !

மேலே கண்ட விபரங்கள் எங்களால் ஏனோ தானோ என்று வேண்டா வெறுப்பில் சொல்லப் படவில்லை ! கண்டதைத்தான் சொல்லுகிறோம் ! 

 கீழே பார்க்க ஒரு உதாரணம் ! 
இது போல  பல கோட்டங்களில்  நடக்கிறது ! 
  
இதில் அதிகமாக  திருச்சி மற்றும்  மதுரை மண்டலங்களில் இருந்துதான்  நிறைய புகார்கள் 

உண்மையான அக்கறை உள்ள மேல் அதிகாரிகள்  
நிச்சயம் இருக்கிறார்கள் ! 

அவர்கள் பார்வைக்கு இந்த வலைத்தளம் மூலம் இது சென்றால் , அவர்களும் உடன்  இதன் மீது நடவடிக்கை எடுத்தால் ,   
REAL  BUSINESS  என்பதை நோக்கி  நாம் சென்றால் , 
நிச்சயம் இலாகா வளர்ச்சி பெறும் ! 
அந்த திசை நோக்கி  நாம் சிந்தித்தால்  அது  நமக்கும் , 
இலாக்காவுக்கும்  நிச்சயம் நல்லது! 

விமரிசனம் செய்வது மட்டும்  நம் நோக்கமாக இருக்க முடியாது !
இலாக்காவில்  ஊதியம் பெறும்  ஊழியர் என்ற வகையில் 'நமக்கு சோறிடும் கோவிலை இடிக்காதீர் ' என்று இடித்துரைக்கவும், உண்மையான வணிகம் புரிந்திடுங்கள் !என்று  வழி காட்டவும் 
நமக்கு கடமை இருக்கிறது !

மேலதிகாரிகள்  தலையிடுவார்களா ? பார்ப்போம் !